Sunday, September 18, 2016

அனல் பொங்கும் காவிரி

வான் பொய்ப்பினும் தான் பொய்யாதோரு மகாநதி
தானும் பொய்த்து  தன்னை சுற்றத்தவரையும் பொய்த்து
தகிக்கின்றது 

வேற்றுநாடுகளுக்கிடையிலும் சுமுகமாய் தவழும் நதிகளுண்டு 
வேற்றுமொழியாயினும் ஒரே தேசத்தினுள்ளோ உணர்ச்சிபிழம்பாய் நதிபற்றி 
எரிகின்றது 

மலைகளில் மேற்கு தொடர்ச்சியின் வளத்தினை சேர்த்து மேகம்தொட்டு 
மழையாய் பொழிந்து பிரவாகமெடுத்து பூம்புகாரில் கலந்திடாமல் 
தவிக்கின்றது 

வளர்ச்சியெனும் வேடமிட்டு கரைநெடுகிலும் அமைத்ததென்ன 
விளைநிலமா இல்லை உயிர் உறிஞ்சும் தொழிற்சாலைகள்தான் இன்று 
புகைக்கின்றது 

மடியினை சுரண்டி மண்ணள்ளி விற்பதுவும் தாயின் தொப்புள் 
கொடியினை விற்று வாழ்வதும் ஒப்பாகும் என்செய்ய அவளுக்கோ 
தோலுரிகின்றது 

கிளர்ச்சி தூண்டும் சங்கங்களும் அதில் அரசியலாக்கும்
இகழ்ச்சி தரும் நிகழ்வாய் மௌன அரசுகளும் நீதிக்கொன்று 
துடிக்கின்றது

அணைதடுத்து இயற்கையை இறுக்கும்  ஒருபுறம் 
மனைவிடுத்து  விவசாயம் கொன்று நீருக்கிறைஞ்சும் மறுபுறமென 
கொதிக்கின்றது 

துருவம்போல் எதிர்க்கரைகள்கொண்டு பிரிந்திட்ட நதியோ 
கர்வம்பூண்ட மானிடரின் விருப்புக்கு வதங்கி வெந்து 
வழிகின்றது 

வரைமுறை தாண்டி முட்டிக்கொள்ளும் பாவிகளுக்கு தெரியாது 
தலைமுறை தாண்டி தவறிழைப்பது நதியோ மெல்லமடிந்து 
மறைகின்றது



Sunday, September 11, 2016

துணை

எத்தனையோ தூரம் இணைந்துதான் கடந்தாயிற்று
எத்தனை வகை பயணம் இனிதாய் முடித்தாயிற்று
சில பொழுதுகளில் சினந்து பின் கசந்து
பல பொழுதுகளில் களித்து பின் கலந்து
என்றுமே மிதிவண்டியில் இரு சக்கரங்களாய் நாம்
ஒரே கோட்டில் உந்துகிறோம் ஒருவருக்கொருவர்
ஒரே பயணம் பகிர்ந்துகொண்டே

Wednesday, August 10, 2016

தனிமை

எனது அருகாமை வெற்றிடங்களில் நீயே பரவியதால் காற்றாகவும்
எனது நினைவலைகளின் நடுவில் நீயே நிரம்பியதால் சிந்தனையாகவும்
எனது தூக்கத்தின் தவிப்பில் நீயே தோன்றியதால் கனவாகவும்
எனது கைபேசியின் அழைப்புகளில் நீயே நிறைந்ததால் பேச்சாகவும்
எனது தனிமைக்கு இணையாக நீயே நிற்பதால் நானாகவும்
தள்ளி சென்று பிரிந்ததற்கான அறிகுறிகளின்றி அருகில் வாழ்கின்றாய்!
- கி.வினோத் 

Saturday, March 07, 2015

கறுப்பாடுகள்

நூற்றாண்டுகள் நகர்ந்தும்
பெண்ணினம் பேணுதல்
ஏற்காத பகுத்தறிவிலி
ஆண்களுக்கு!

புணர்வுக்கு வடிகாலாய்
பெண்டிரெனில்
நாடெதற்கு உனக்கு
வசிப்பதற்கு மக்களினூடே?

நாய் நரிகள்கூட
கற்ப்பழித்ததாய் கேள்வியில்லை
நீசனே நீயோ பூக்களே
பறிப்பதற்கு காரணம் என்றாய்!

உன் தாயும் தங்கையும்
தனித்திருந்து தவித்தால்
தன்னிலை திருந்த
தியாகமென அமையும்!

அவ்வாறு நீ திருந்தி
இருந்தென்ன பயன்
ஆண்களில் கறுப்பாடுகள்
குறைவது நன்று!

Wednesday, December 17, 2014

சாத்தான் செயல்

பூக்கள் நசுக்குவதே
தீவிரவாதமெனில் - இளம்
மொட்டுக்கள் பொசுக்குவது
சாத்தானின் செயலா?
கொடுங் கோழையடா நீ!
உன் வேதத்தில்
இளந்தளிர்கள் அற்பணிப்பதை 
என்னவென்று சொல்வார்கள்?
உனக்கு வேதம் ஓதியவனை,
உனக்கென வேலை செய்தவனை
கொணர்ந்து கைகால் வெட்டி 
பிள்ளைகளுக்கு பாடமெடுக்க 
பணித்தாலும் அடங்காது
இன்னுயிர் நீத்த ஆத்மாக்கள்!

Thursday, July 24, 2014

புலம்பெயர்தல்

கருவறையினுள் கைவிட்டு
கொடியுடன் பிடுங்கி
தூர எறிதல் போல் 
இந்த புலம்பெயர்தல்!
கதி கலங்கியது 
கருவறையே பொசுங்கியதும்.
உயிர் பயமோ,
உயிர் வலியோ,
தூரத்து விடியலை 
துரத்தியே 
முடிவற்ற  ஓட்டம்...

Sunday, May 04, 2014

வீர மரணம்

மாண்டபின் மண்ணோ விண்ணோ
சடுதியில் விடுகின்ற உயிரின் மதிப்பு
விலை மதிப்பற்ற தியாகமாகும்
நாட்டிற்காகவோ
நம்மை சார்ந்தவர்காகவோ
பிரியும்பொழுது.

Monday, December 24, 2012

புதிய புரட்சி


புதிய புரட்சி

பாரதியும் பகத் சிங்கும்
பிறப்பெடுத்தாலும்
புதியதொரு புரட்சிக்கு
புறப்படுவார்கள்
பெண் விடுதலை தேடி!

தலைப்பு தீ

தலைப்பு செய்திகளில் தகிக்கும்
கற்பழிப்பு பற்றிய தீ
தணிந்து மறந்துவிடும்
அடுத்த முறை
தலைப்பில் வரும் வரையோ
அடுத்தது உன் வீட்டின்
கதவு தட்டும் வரையோ!

விலங்கினம்


தெரு நாய்களுக்கு நிகராய்
தென்படும் இடமெல்லாம்
வன்புணர்ச்சி கொள்ளும்
மிருக இயல்பு ஏன்?

நவீனம் நோக்கி
நூற்றாண்டுகள் நகர்ந்தும்
போகத்தின் வடிகாலாய்
பெண்மையை ஸ்தாபிக்கும்
ஆணாதிக்க சமுதாயமா?

காலம் கடந்த நீதியும்
கடுமையான தீர்ப்பு பெறாத
விலங்கினத்தின் விடுதலை வாழ்வும்
நடைமுறை நகங்கள் நசுக்கி
நெடுந்துயரில் தள்ளப்படும்
கற்பிழந்தவரின் வடுக்களுமா?

காக்கும் கடமையை
கழுவிலேற்றி பின் கைகட்டி
பார்க்கும் நிலைமை
தரும் அசட்டுத்தனம்
துளிர்விடும் துணிச்சலா?

நாடாள்வது பெண்ணாயினும்
விபத்தில் வீழ்ந்தவளின்
துயர் துடைக்கவோ அன்றி
துணை நின்றிடும் மக்களை
தணிக்க திராணியற்ற
அரசக் கோமாளிகளோ?

எதுவாயினும் எங்கள்
உயிர் பூக்களின் இதழ்கள்
முற்றிலும் உதிர்வதற்குள்
வினை செய்த விலங்கினத்தை
வேட்டையாட வகை செய்குவோம்!

Tuesday, October 02, 2012

மகாத்மா காந்தி பிறந்த நாள்


நாடே பரபரப்பாய்
பற்றி எரிகின்றது
ஊழல் உச்சம்
அரசியல் அசிங்கம்
எதிர்மறை அரசு
செயலற்றதாகவோ
செயல் பதற்றமாகவோ
அனைத்தும் அமைதியாக
கவனித்தபடி கூண்டுக்குள்
மகாத்மா காந்தி சிலை!

-----------


ஒரு மகாத்மாவினால்
வெள்ளையனை
வெளியேற்ற முடிந்தது
ஒராயிரம் மகாத்மாக்கள்
இருந்தும்
காப்பாற்ற இயலாமல்
பரிதவிக்கும் நிலை
நம் நாட்டிற்கு!

Sunday, September 30, 2012

சாட்டை


சில பல பொத்தல்களுடன்
சமுதாய சிக்கல்களுக்கு
சாட்டையடியாகவும்

மலரும் தலைமுறை
பம்பரத்திற்கு உந்துசக்தியாய்
சுழற்றும் சாட்டையெனவும்

ஆசிரியர்!

Tuesday, September 04, 2012

பந்தயத்தின் இரு பக்கம்


பதைத்து பரிதவித்தது பெற்றமனம்
முட்டி முதல் மூன்றாவது எட்டுவாளோ?

சிரித்து சுற்றுபுறம் சிலாகித்தது
போட்டி என்பதறியாத பிஞ்சுமனம்

நடை மேடை


வாகன இரைச்சலுக்கிடையில்
வானம் பார்த்த இரவுகள்

விதியோ பிறப்பின் சதியோ
வீதியோர வாழ்க்கை

விடியலில் புலப்பட்டது வழி
நம்பவேண்டும் நடைமேடை துறக்க

உழைப்பும் நாணய முயற்சியும்
உயர்த்தும் கூரை நிழலுக்கு

Wednesday, August 15, 2012

குடிமகனும் முடிமன்னனும்

ஒற்றை ஒலிம்பிக் மெடல்
கிரிக்கெட் உலகக் கோப்பை
அயல்நாட்டில் இந்தியனின் சாதனை
எளிதில் உணர்ச்சி வயப்படும் -
குடிமகன்!

மாநிலம் தழுவிய கலவரம்
நிலம் புகுந்த இரயில்
பரவலாய் வெடிக்கும் உயிர்கள்
எதிலும் சலனமற்ற முகம் -
முடிமன்னன்!

சுதந்திர தினங்கள்

விடுமுறையாயினும் விடியலில் குளித்து
கொடியேற்றம் காண பள்ளிக்கு விரைந்து
சட்டைப்பையில் காகிதக் கொடியும்
ஓட்டை வாயில் மிட்டாய் கறையுமாக
சுதந்திர தினங்கள்!

விடுமுறையொன்று அதிகமென சுகித்து
கொடியேற்றம் காண டிவி உயிர்ப்பித்து
மொட்டை தலைப்பில் பட்டிமன்றம்
குட்டை பாவாடையில் நடிகை பேட்டி
சுதந்திர தினங்கள்!

எதற்கென கொண்டாடுவது இதை
கோடிக்கணக்கில் சுரண்டிய பணமும்
அலைக்கற்றை, விளையாட்டு, கல்வி
விலைபோன நீதியும் ஊழலில் உழன்று
சுதந்திர தினங்கள்!

எனக்கென காரணம் உண்டு
விடுதலை வேட்கையின் வரலாறு நினைக்கவும்
இளம்தலைமுறைக்கு தேசபக்தி புகட்டவும்
தூரத்து விடியலை நம்பியும் வேண்டும்
சுதந்திர தினங்கள்!

எரிபொருளின் எட்டா விலை

வேலையிடம் சேர்ப்பிக்கும் பேருந்தும்
காய்கனி சுமக்கும் லாரிகளும்
வயிறு நிறைக்கும் சமையலடுப்பும்
எரிசக்தியின்றி எம்
கண்ணீர் சக்தியிலா இயங்குகின்றன
சொல்லடி சிவ சக்தி!

இன்றைய மாணவன்

தெருவிளக்கொளியில் அறிவு
தாகம் தணித்து
பெருங்கிணறு தாண்டி
பெரியதொரு படிப்பு
பின்னர்
சிறு தோல்வி தாளாமல்
புல் தடுக்கி வீழ்ந்து
தன்னுயிர் தானே மாய்த்தது
பரிதாபமல்ல
பயங்கர கோழைத்தனம்
அதுவரை இறைத்த அறிவு
விழலுக்குதானோ?
  

Monday, August 13, 2012

நிலைப்பாடு



அரசியல் தர்மம்,
பொதுவுடைமை,
அவையடக்கம்
எனும் உடைகள் களைந்து
நிர்வாணம் பழகிய
விலை மகளென
வெட்கம் துறந்தது
இன்றைய அரசியல்வாதியின்
நிலைப்பாடு !

இடைவெளி


மெலிதாய்
துகிலென படர்கின்றது
புலப்படாத கண்ணாடி
உனக்கும் எனக்குமான
இடைவெளியில்!
இந்நாட்களில்
பலமுறை முட்டிமோதி
நெற்றி தேய்த்தோம்
குறைகின்ற
தொடு தூரத்தில்!

இரு வரிக் குரல்


மூத்தவள்
முடிந்தவரை கூச்சலிட்டு
இயன்றவரை
நெட்டித்தள்ளி
போட்டியிடுவாள்
இளையவனுடன் - அவனோ
உணவுப் பரிமாறுகையில்
இரு தட்டுக்கள் நீட்டுவான்
அவளுக்கும் சேர்த்து!
அவனது இரு வரிக் குரல்
அம்மா, அக்கா!