Sunday, September 18, 2016

அனல் பொங்கும் காவிரி

வான் பொய்ப்பினும் தான் பொய்யாதோரு மகாநதி
தானும் பொய்த்து  தன்னை சுற்றத்தவரையும் பொய்த்து
தகிக்கின்றது 

வேற்றுநாடுகளுக்கிடையிலும் சுமுகமாய் தவழும் நதிகளுண்டு 
வேற்றுமொழியாயினும் ஒரே தேசத்தினுள்ளோ உணர்ச்சிபிழம்பாய் நதிபற்றி 
எரிகின்றது 

மலைகளில் மேற்கு தொடர்ச்சியின் வளத்தினை சேர்த்து மேகம்தொட்டு 
மழையாய் பொழிந்து பிரவாகமெடுத்து பூம்புகாரில் கலந்திடாமல் 
தவிக்கின்றது 

வளர்ச்சியெனும் வேடமிட்டு கரைநெடுகிலும் அமைத்ததென்ன 
விளைநிலமா இல்லை உயிர் உறிஞ்சும் தொழிற்சாலைகள்தான் இன்று 
புகைக்கின்றது 

மடியினை சுரண்டி மண்ணள்ளி விற்பதுவும் தாயின் தொப்புள் 
கொடியினை விற்று வாழ்வதும் ஒப்பாகும் என்செய்ய அவளுக்கோ 
தோலுரிகின்றது 

கிளர்ச்சி தூண்டும் சங்கங்களும் அதில் அரசியலாக்கும்
இகழ்ச்சி தரும் நிகழ்வாய் மௌன அரசுகளும் நீதிக்கொன்று 
துடிக்கின்றது

அணைதடுத்து இயற்கையை இறுக்கும்  ஒருபுறம் 
மனைவிடுத்து  விவசாயம் கொன்று நீருக்கிறைஞ்சும் மறுபுறமென 
கொதிக்கின்றது 

துருவம்போல் எதிர்க்கரைகள்கொண்டு பிரிந்திட்ட நதியோ 
கர்வம்பூண்ட மானிடரின் விருப்புக்கு வதங்கி வெந்து 
வழிகின்றது 

வரைமுறை தாண்டி முட்டிக்கொள்ளும் பாவிகளுக்கு தெரியாது 
தலைமுறை தாண்டி தவறிழைப்பது நதியோ மெல்லமடிந்து 
மறைகின்றது



No comments: