Thursday, December 15, 2005

நம்ம சாதிதேன்!

சாதி பார்த்து தேதி பார்த்து - நம்ம
சம்முவம் பயலுக்குத்தான்
சீராக் கட்டிவைச்சோம்.
மூணாநாளே காசுகேட்டு வந்து நிக்கா
மூக்கு சிந்திகிட்டு எங்க அக்கா!

மேலூரும் கீழூரும்
கொம்பு சீவின காளையாத்தான்
கொஞ்சம் வருசமாவே முட்டிகிடுதான்
சாதிமாறி சோடியொன்னு
ஊரவிட்டு பறந்ததுக்கு!

வடக்கால - வீதியெல்லாம்...
சாக்காடா ஆக்கிபுட்டு
வீட்டுக்குள்ள நடுங்கறான்
வக்கிர புத்தி வளர்த்துகிட்டு...
மத்தவன் மதத்தை மிதிச்சிகிட்டு!

சாதியோட சூட்சுமம்
சுத்தமா புரிபடலை
பகுத்தறிவா பார்த்தாலும்,
பத்தாப்புக்கூட படிக்காத
பாவி மக்கா எனக்கு!

பஞ்சாயத்து டிவியில
பலமுறை பார்த்திருக்கேன்
கலர் கலரா சினிமாவுல
கைதட்டி ரசிச்சிருக்கேன்
சாதியொழிப்பு சொன்ன கதைங்கள!

கவிதைக் கட்டுரைங்க பலதுலயும்
பொதிப் பொதியா பொஸ்தகத்துலயும்
படிச்சவுக சொல்றாக -
பசேலுன்னு பதிஞ்சிடனும்
பிரிவினையேக் கூடாதுன்னு!

எள்ளளவும் நெனச்சதில்லே
எஞ்சோட்டுப்பய வேறு சாதின்னு!
எப்பவாச்சும் எட்டிப்பாக்கும் - அட
எங்க ஊரு மந்திரிகூட
நம்ம சாதிதேன்!

- கி.வினோத்
04/07/2003.

2 comments:

கீதா said...

"எப்பவாச்சும் எட்டிப்பாக்கும் - அட
எங்க ஊரு மந்திரிகூட
நம்ம சாதிதேன்!"

யதார்த்தம்..

அன்புடன்
கீதா

கி.வினோத் said...

எத்தனை யுகம் ஆனாலும் இது ஒழிய சிறிது சிரமப்படத்தான் வேண்டியிருக்கு!
-- கி.வி.