Monday, August 16, 2010

வெந்நீர் மீன்கள்

தண்ணீரில் பிறந்து
தனக்கானதாய் உலகம் பழகிய
மீனினம் நான்

விரியட்டுமென் எல்லையென
புலம் பெயர்ந்தேன்
வெந்நீர் நிரம்பிய வேற்றுலகிற்கு

சில மீன்கள்
வெந்து விழுப்புண் பெற்று
வெந்நீர் மீன்களாயின

வேறு சில
வெம்மை பொறுக்காமல்
விவேகமாய் திரும்பின

பெரும்பாலானவை
வெம்மையும் பழகாமல் தண்ணீரும்
திரும்பாமல் தள்ளாடின

அனுதினம் புதிதாய்
கொதிநீர் ஊற்றபடுவதாய்
உணர்வு எனக்கு

தண்ணீர் தேசம் திரும்பி
ஆற வைக்கலாமென
நாட்கள் நீந்தப் பயில்கின்றேன்

Sunday, August 15, 2010

நூற்றாண்டு கனவு

அறுபத்தி மூன்றாகின்றது
அகவை - எம்
தாய் திருநாட்டின்
சுதந்திர தேவிக்கு!
முதல் பத்தில்
முதிர்ச்சியடைந்து
முயற்சிகள் பல கண்டது!
இடையில் இலக்கில்லாமல்
இன்னல்கள் நேர்கொண்டது!
இழுத்து செல்லும்
இதிகாசத் தலைவர்களின்
பரிகாச பாதக செயல்களுக்கு
அரசியலென பெயரிட்ட
நயவஞ்சகமும் கண்டது!
எழுத்தறிவு கொண்டவரின்
எண்ணிக்கை உயர்வினாலும்
திறைகடல் தாண்டிய
திறன்மிகு இளையவர்களினாலும்
புதியதொரு விடியலும் கண்டது!
பல்லாண்டுகளாய் தொடரும்
'வளர்கின்ற' நாடெனும் பட்டம்
நூற்றாண்டிற்குள்ளாவது
மாறிட மெய்படுமோ!

முடிவுகள்

இதுவரை
முக்கியமான முடிவுகள்
இதுவா அதுவாவென
இரு தண்டவாளங்களின் மேலெ
தடுமாறி பயணிக்கின்றன
தூரத்தே இரு மனநிலைகளும்
இணைவதுவாய் தோற்றம்
கடந்து சென்றபோதும்
முற்று பெறாத முடிவுகள்!

Sunday, August 08, 2010

அருகாமை

இசைதட்டு மாற்று,
சன்னலை இறக்கு,
குளிர்பதனியை சரிசெய்,
ஏனைய அதட்டல்கள் கேளாமல்
அமைதியுடன் பயணிக்கின்றது
எனது வாகனம்.
குட்டி தேவதையின்
அருகாமை மதிப்பு
ஒளியில்லாத இருளுக்கு,
வெப்பமில்லாத தட்பத்திற்கு
புரிவது போன்றது.

தீவு

வானூர்தியின் வரைபடத்தில்
உன் வசிப்பிடம்
விலகி விலகி விரைகையில்
துவங்கியது
காற்றிலாத அறையில்
மூச்சடைக்கும் உணர்வு!
மனிதர்களின் மத்தியிலும்
நீயிலாத தனிமை தருணம்
நாற்புறமும் நீர் சூழ்ந்த
தீவாய்தான் தோன்றியது!
விலைவாசியின் ஏறுமுகமாய்
இந்த இடைவெளி
காதலை பெருக்கினாலும்
இனிமேலும் வேண்டாமென
வேண்டுவது இயற்கை!

Thursday, July 15, 2010

இதுவும் கடந்து போகும்

நேற்றும்
இன்றும்
சந்தித்தன!

நேற்று -
நிரம்பி நிற்கின்றது
நிறங்கள் தோய்ந்த
நினைவுகளில்!

இன்று -
நிறம் தேய்ந்த
நினைவுகளுடன் புதிய
நிகழ்வுகளில்!

நாளை வந்து
அறிவுறுத்தியது
சுகம் துக்கம்
எதுவாயினும்
இதுவும்
கடந்து போகும்!
-- கி.வினோத்

விளையாட்டு

சிலருக்கு
துளி துளியாய்
மனம் புகும்
மெல்லிசையாய்
அமைகின்றது
வாழ்க்கை வரப்பிரசாதம்!

சிலருக்கு
அடி அடியாய்
மனம் அதிரும்
பறையொலியாய்
வாய்க்கின்றது
வாழ்க்கை பிடிசாபம்!

நேற்றை மிஞ்சிய
இன்றையக் கொடுமை
நாளையும் பன்மடங்காய்
விரியுமென
விளிம்புவரை வந்து
வெறுத்து அயர்ந்தது
மேலுமொரு அடிதாங்காத
மனது!

விதிக்கப்பட்ட களத்தில்
வழங்கப்பட்ட வீரர்கள்
வைத்து விளையாட்டு!
இடைவெளி பிளந்து
உயிர்ப்பந்து நகர்த்தி
நிம்மதி இலக்கடைய
நெடுநேரப் போராட்டம்!

அவர் அவருக்கென
வகுக்கப்பட்டதில்
சிறு சிறு சுகம்தேடி
விரைகிறது ஆட்டம்!
-- கி.வினோத்

Monday, July 05, 2010

பார்வை


தனிமை ஆணுக்கும் தகிக்கும்
என உணர்த்த நானும்,
கொடுஞ்செயல் பெண்ணுக்கும் பழக்கம்
என உணர்த்த அவளும்
பிரிகின்றோம்!
பொதுவாய் பெண்மைக்கு
பலம் சேர்ப்பதே
மண்ணின் பெருமையென இந்த
சாயம் பூசிய சமுதாயம்
காட்சி பொருளாக்கி
அழ வைத்தது என் ஆண்மையை!
பெண்மை முகமூடிக்கு பின்புறம்
குரூர களிப்புடன் சிரித்தாலும்
வெளிபுறம் அழுகின்றாள்
என்றும் போலவே!
அன்றும்
கைபிடித்தவனை காதலித்து
உடனிருக்கவில்லை அவள்!
இன்றும்
எதிராளியென நினைத்து
எதிர்க்கவில்லை நான்!
சாயம் கலைத்த சமூகம்
மெல்ல மெல்ல சரிந்து
என் மீது படர்கையில்
விடியும் இருவருக்கும்!
             --கி.வினோத்

Friday, June 02, 2006

விடியலுக்கு வெளிர் பகலவன்
இரவுக்கு குளிர் நிலவவள்
இயல்பானதொரு பொருத்தம்தான்
நீயும் நானும் கைக்கோர்த்தபின்!
எரிதழல் நிறைத்தசூரியனின் கர்ப்பமும்
திகைப்புகள் போர்த்தியநிலவின் நேர்த்தியும்
உனக்கும் எனக்குமிடையில்!
வலி எடுக்கும் முன்னரே
வலி 'எடுக்கும்' முனைப்பும்,
விரல் தொடும் முன்னரே
விழைந்து நிற்கும் ஆசையும்,
தூரம் இருக்கையில்கூட
நினைவுகளின் நெருக்கத்தில்,
என நீள்கிறது இந்தக் கவிதை!
முதல் ஆண்டு முதல் படிதான்,
மீன்டும் ஒருமுறை
மழலை பெசலாம்
வரமாய் கிடைதிடும்...குட்டி கவிதையுடன்!!!

Friday, April 07, 2006

"ஸ்கேன் செய்தல்" எனும் கவிதை

விரல்பட்ட நத்தையாய்
சுருண்டு சிறுத்து
சகலமும் உரித்து
சின்னஞ்சிறு மொட்டென
தாய் மடி சேர்ந்து
மிதப்பதுவாய் இருந்தது!
கறுப்பு வெள்ளையோ
கட்டமும் வட்டமுமோ
கலந்து தீட்டியதாய்
கைகால்கள் பார்க்கையில்
எனதுள்ளும் உயிரணு பிரிந்து
உன்னத உயிர் சனிப்பது (தை)
எதனுடன் ஒப்பிடுவது
இன்னொரு தாய்மை தவிர
இந்த புள்ளியில்தான்
எனது சேய் மனமும்
தாய் மனமும் இணைந்ததுவோ!
--கி.வி

இதுவும் ஒரு ராகம்!!!

என் முன்னே
கல்வியுருவாய் அந்த வீணை
நான் வாசிக்கும் முன்னரே
நரம்பினை அறுத்து
பாழ்செய்தது இந்த வறுமை
கேட்டு சுகித்திருக்கின்றேன்
உயிர் கிள்ளும்
ஆலாபனையாய்
அதே வீணை நாதம்!
அரை சாண் வயிற்றின்
அதிர்வுகள் மீறி
ஒலித்துக் கொண்டிருக்கிறது
அதே வீணை நாதம்!
இன்றெல்லாம்
மயக்கத்தில் கனவு
தெய்வம் ஒருவன் - எனக்கு
வீணை அளிப்பதாய்!
-- கி.வி

அமிர்தம்

நேற்றைய மீதங்களில்
அமிர்தம் தேடுவது,
பழைய சோறிலிருந்து
படுக்கை வரை
வந்திருக்கிறது!
-- கி.வி.

புதியதொரு கூடு

எனது கை கால்களை பிடுங்கி
எறிந்தது போல் இருந்தது,
ஏழெட்டு மரங்களை
எனதாகும் நிலத்திலிருந்து
எடுத்து செல்கையில்!
சில பல குடும்பங்கள்
இருந்திருக்கும் அந்த
உயர் கூடுகளினூடே
எனக்கெனவே
புதியதொரு கூடு
பின்னுவதில்
மறந்து மகிழ்ந்தது
மனித மனம்
-- கி.வி.

ஆதங்கம்

ஆணென நான் கொண்ட
வேடத்தை
வெகுவாய் வெறுக்கின்றேன்!
பெண்ணென உருகொண்ட
என்னவளால்
உணர முடிகிறது -
தெய்வீகமான இசை கேட்டும்
மழை சாரலென குரல் கேட்டும்
மெது மெதுவாய் நடமாடும்
இவையெதுவும் இதுவரை
கண்டிராத
எங்கள் சிறு மொட்டினை
--கி.வி

Tuesday, February 14, 2006

பட்டாம்பூச்சி தேவதை



முதற்கணை வீசியதில்

முதன்முறை கொஞ்சியதில்

முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்

முறுவலுடன் இதழ் பதித்ததில்

முழுவதுமாய் மெய் சேர்கையில்

என அவ்வபொழுது

தேவதையாகின்றாய்

பட்டுப் புழு

பட்டாம்பூச்சியாவது போல்!

இன்னும் எத்தனை

பட்டுப் புழு உன்னுள்?

-- கி.வி

14/02/2006