Thursday, July 15, 2010

இதுவும் கடந்து போகும்

நேற்றும்
இன்றும்
சந்தித்தன!

நேற்று -
நிரம்பி நிற்கின்றது
நிறங்கள் தோய்ந்த
நினைவுகளில்!

இன்று -
நிறம் தேய்ந்த
நினைவுகளுடன் புதிய
நிகழ்வுகளில்!

நாளை வந்து
அறிவுறுத்தியது
சுகம் துக்கம்
எதுவாயினும்
இதுவும்
கடந்து போகும்!
-- கி.வினோத்

விளையாட்டு

சிலருக்கு
துளி துளியாய்
மனம் புகும்
மெல்லிசையாய்
அமைகின்றது
வாழ்க்கை வரப்பிரசாதம்!

சிலருக்கு
அடி அடியாய்
மனம் அதிரும்
பறையொலியாய்
வாய்க்கின்றது
வாழ்க்கை பிடிசாபம்!

நேற்றை மிஞ்சிய
இன்றையக் கொடுமை
நாளையும் பன்மடங்காய்
விரியுமென
விளிம்புவரை வந்து
வெறுத்து அயர்ந்தது
மேலுமொரு அடிதாங்காத
மனது!

விதிக்கப்பட்ட களத்தில்
வழங்கப்பட்ட வீரர்கள்
வைத்து விளையாட்டு!
இடைவெளி பிளந்து
உயிர்ப்பந்து நகர்த்தி
நிம்மதி இலக்கடைய
நெடுநேரப் போராட்டம்!

அவர் அவருக்கென
வகுக்கப்பட்டதில்
சிறு சிறு சுகம்தேடி
விரைகிறது ஆட்டம்!
-- கி.வினோத்

Monday, July 05, 2010

பார்வை


தனிமை ஆணுக்கும் தகிக்கும்
என உணர்த்த நானும்,
கொடுஞ்செயல் பெண்ணுக்கும் பழக்கம்
என உணர்த்த அவளும்
பிரிகின்றோம்!
பொதுவாய் பெண்மைக்கு
பலம் சேர்ப்பதே
மண்ணின் பெருமையென இந்த
சாயம் பூசிய சமுதாயம்
காட்சி பொருளாக்கி
அழ வைத்தது என் ஆண்மையை!
பெண்மை முகமூடிக்கு பின்புறம்
குரூர களிப்புடன் சிரித்தாலும்
வெளிபுறம் அழுகின்றாள்
என்றும் போலவே!
அன்றும்
கைபிடித்தவனை காதலித்து
உடனிருக்கவில்லை அவள்!
இன்றும்
எதிராளியென நினைத்து
எதிர்க்கவில்லை நான்!
சாயம் கலைத்த சமூகம்
மெல்ல மெல்ல சரிந்து
என் மீது படர்கையில்
விடியும் இருவருக்கும்!
             --கி.வினோத்

Friday, June 02, 2006

விடியலுக்கு வெளிர் பகலவன்
இரவுக்கு குளிர் நிலவவள்
இயல்பானதொரு பொருத்தம்தான்
நீயும் நானும் கைக்கோர்த்தபின்!
எரிதழல் நிறைத்தசூரியனின் கர்ப்பமும்
திகைப்புகள் போர்த்தியநிலவின் நேர்த்தியும்
உனக்கும் எனக்குமிடையில்!
வலி எடுக்கும் முன்னரே
வலி 'எடுக்கும்' முனைப்பும்,
விரல் தொடும் முன்னரே
விழைந்து நிற்கும் ஆசையும்,
தூரம் இருக்கையில்கூட
நினைவுகளின் நெருக்கத்தில்,
என நீள்கிறது இந்தக் கவிதை!
முதல் ஆண்டு முதல் படிதான்,
மீன்டும் ஒருமுறை
மழலை பெசலாம்
வரமாய் கிடைதிடும்...குட்டி கவிதையுடன்!!!

Friday, April 07, 2006

"ஸ்கேன் செய்தல்" எனும் கவிதை

விரல்பட்ட நத்தையாய்
சுருண்டு சிறுத்து
சகலமும் உரித்து
சின்னஞ்சிறு மொட்டென
தாய் மடி சேர்ந்து
மிதப்பதுவாய் இருந்தது!
கறுப்பு வெள்ளையோ
கட்டமும் வட்டமுமோ
கலந்து தீட்டியதாய்
கைகால்கள் பார்க்கையில்
எனதுள்ளும் உயிரணு பிரிந்து
உன்னத உயிர் சனிப்பது (தை)
எதனுடன் ஒப்பிடுவது
இன்னொரு தாய்மை தவிர
இந்த புள்ளியில்தான்
எனது சேய் மனமும்
தாய் மனமும் இணைந்ததுவோ!
--கி.வி

இதுவும் ஒரு ராகம்!!!

என் முன்னே
கல்வியுருவாய் அந்த வீணை
நான் வாசிக்கும் முன்னரே
நரம்பினை அறுத்து
பாழ்செய்தது இந்த வறுமை
கேட்டு சுகித்திருக்கின்றேன்
உயிர் கிள்ளும்
ஆலாபனையாய்
அதே வீணை நாதம்!
அரை சாண் வயிற்றின்
அதிர்வுகள் மீறி
ஒலித்துக் கொண்டிருக்கிறது
அதே வீணை நாதம்!
இன்றெல்லாம்
மயக்கத்தில் கனவு
தெய்வம் ஒருவன் - எனக்கு
வீணை அளிப்பதாய்!
-- கி.வி

அமிர்தம்

நேற்றைய மீதங்களில்
அமிர்தம் தேடுவது,
பழைய சோறிலிருந்து
படுக்கை வரை
வந்திருக்கிறது!
-- கி.வி.

புதியதொரு கூடு

எனது கை கால்களை பிடுங்கி
எறிந்தது போல் இருந்தது,
ஏழெட்டு மரங்களை
எனதாகும் நிலத்திலிருந்து
எடுத்து செல்கையில்!
சில பல குடும்பங்கள்
இருந்திருக்கும் அந்த
உயர் கூடுகளினூடே
எனக்கெனவே
புதியதொரு கூடு
பின்னுவதில்
மறந்து மகிழ்ந்தது
மனித மனம்
-- கி.வி.

ஆதங்கம்

ஆணென நான் கொண்ட
வேடத்தை
வெகுவாய் வெறுக்கின்றேன்!
பெண்ணென உருகொண்ட
என்னவளால்
உணர முடிகிறது -
தெய்வீகமான இசை கேட்டும்
மழை சாரலென குரல் கேட்டும்
மெது மெதுவாய் நடமாடும்
இவையெதுவும் இதுவரை
கண்டிராத
எங்கள் சிறு மொட்டினை
--கி.வி

Tuesday, February 14, 2006

பட்டாம்பூச்சி தேவதை



முதற்கணை வீசியதில்

முதன்முறை கொஞ்சியதில்

முத்தாய்ப்பாய் கைப்பற்றியதில்

முறுவலுடன் இதழ் பதித்ததில்

முழுவதுமாய் மெய் சேர்கையில்

என அவ்வபொழுது

தேவதையாகின்றாய்

பட்டுப் புழு

பட்டாம்பூச்சியாவது போல்!

இன்னும் எத்தனை

பட்டுப் புழு உன்னுள்?

-- கி.வி

14/02/2006

Monday, January 30, 2006

அதிசய விருட்சம்

வளர்ந்து,
கிளைவிட்டு,
உடலெங்கும் முகிழ்ந்து,
பூத்து சாமரம் வீசியது
அந்த அதிசய விருட்சம்!
எனது தயக்கத்திற்கும்
உனது தயக்கத்திற்குமான,
எனது இசைவிற்கும்
உனது இசைவிற்கும்
இடையிலான நொடிப்பொழுதில்
அசுரத்தனமாய் வளர்ந்தது
அந்த அதிசய விருட்சம்!

-- கி.வி

Wednesday, December 28, 2005

தனிமை

இதுநாள்வரை
எனது தனிமை
உருவமற்று,
உணர்வு பொங்க அலைந்தது
என்னுடன்!
திடுமென
உன் உருவம் பெற்று
என் பழையன கிழித்து
வலம் வருகிறது
என்னுடன்!
இனியும்
எவ்வாறு அழைப்பேன்
அதை தனிமையென்று!!
-- கி.வினோத்
25/12/2005

தெய்வீகம் நோக்கி

உயிர் கொடுக்கிறாய்
சிருஷ்டி உனது இயல்பு இனி!
விளைநிலமாய் மாறி
விருட்சம் வளர்க்கிறாய்
ஏனைய வலிகள்
எதிர்கொள்ளும் மண்ணுலகமாகிறாய்!
இருவருக்குமாய் புசித்து,
இருவருக்குமாய் வசித்து
அருள் மழை பொழிந்து
பால் மழை சுரந்து
தெய்வீகம் நோக்கி
விரைகின்றாய்!
உன் உதிரம் உதிர்த்து
உயிர் வலியின்
கடைநிலை சென்று
மழலையினை ஈன்றாய்!
உனக்கு
உலகின் உயர்ந்த பரிசு -
நீ ஒரு "தாய்"!!!
-கி.வினோத்
25/12/2005

Thursday, December 15, 2005

காத்திருத்தல்

வானம் பார்த்த இரவுகளில்
எண்ணி எண்ணி
தீர்ந்து போயின
நட்சத்திர சிதறல்கள்!
விரைவினில் வந்துவிடு
இன்னுமொரு வானமில்லை!!!
-- கி.வினோத்
26/06/2003

அழைப்பிதழ்

முரசா இது?
நம் மணநாளை...
ஊரறிய பரைசாற்ற!
மயிலிறகு ஓலையிது
தெரிந்தவருக்கெல்லாம் கொடுத்து வா!

இரு இதயம்
இணையும்பொழுது
எவருமறியாவிடில்
மூடிய புத்தகமாகிவிடும்.

நம் வழியெங்கும்
வாழ்த்துக்கள் நிறைதல்
பிரவாகமாய் வழிந்திடும்
நீர் வீழ்ச்சிக்கு ஒப்பாகும்...
நனையட்டும் நெஞ்சங்கள்!!!
-- என்றென்றும் அன்புடன்
கி.வினோத்