Monday, December 16, 2019

ஒரு புறம் பாயும் காதல் நதி

உனது புதுப்புது முகங்களில் உள்ளம் கரைத்து காதல் வளர்த்தவன்
ஏனோ நேற்றைய முகத்தின் ரேகைக்கண்டு
இதயத்தில் விரிசல் கொண்டனன்

சுயமதிப்பீடு செய்து விம்முகின்றாய்
உனது உயர்மதிப்பிற்கு சான்றிதழ் தேடித் தோற்கின்றாய்
சிற்சில உறவுகளின் பிரதிபலிப்பு பொய்ப்பின்
மறுதலித்து முகம் வாடுகின்றாய்

அன்பளிப்புடன் சிறிதாய் எதிர்பார்ப்பும் சேர்ப்பது போல்
காணிக்கையுடன் பக்தியில் சுயநல வேண்டுதல் போல்
காதலிலும் கைமாறு கேட்கிறாய் தப்பில்லை!

ஒரே திசையில் பாயும் நதி பயணமாய் 
ஒரே வழியில் பிராவாகமெடுக்கும் அன்பு 
கரைதட்டி கவலைக்கொண்டு வெதும்பினால்
என்று சேர்வது கடலை?

தனக்கென வேட்கை இல்லாவிடினும் 
எனக்கெனவொரு வழித்துணையாகவாது வா
இம்மியளவும் எதிர்பார்ப்பற்ற 
நாய்குட்டியின் விசுவாசத்துடன்
நீயும் நானும் ஓடலாம்!!

— கி. வினோத்
16/12/2019

Tuesday, February 19, 2019

சிறுத்தைகளின் சரித்திரம்

 காதலர் தினமன்று கருப்புதினமாக்கிய கோழை வதம். Feb 14, 2019 அன்று நடந்த வன்முறை தாக்குதலில் இன்னுயிர் நீத்த 44 இந்திய வீரர்களுக்கு வீர வணக்கமும் அஞ்சலியும் இந்தக்  கவிதை - கி.வினோத்
#புல்வாமா #pulwama 

படையலுக்கு நேர்ந்துவிடும் பலியாடுகள் இல்லை நீவிர் 
படைகளுக்கு வலு சேர்க்கும் சிறுத்தைகள் அல்லவா நீவிர்!

வீரமுடன் எல்லை காப்பதும் போர்புரிவதும்  தினசரி அலுவல்
விவேகமுடன் கலகம் உட்பூசல் கையாள்வது பகுதி நேரம்
வேட்கையுடன் தீவிரவாதம் தகர்ப்பது  பட்டியலிட்ட பணி 
பாசமுடன் பேரிடர் வதைக்கும் மக்கள் மீட்பது உமது மாண்பு
நேசமுடன் மனை மக்கள்விட்டு தனித்து வாடுவதும் பண்பு
பெருமையுடன் பணியிலும் பனியிலும் உயிர் தியாகம் சிறப்பு


வரம்புகள் பிரித்து விதிமுறையுடன் தாக்குபவன் தேவலை
நரம்புகளின்றி கொடும்நியதி வகுக்கும் கோழைகளின் வேலை
பயமேதுமின்றி பகட்டாய் ஆளும் அரசோ அதன் எந்திரமோ
பாதுகாப்பு குறைவை வெட்கமின்றி கடமையாக்கும் காவலோ
பச்சை துரோகமென உணர்ந்திடாத ஆயுத ஊழல் பேரங்களோ
பக்கத்துணையென நடித்து முதுகினில் குத்தும் பலரை தாங்குவீர்

தம் மண்ணின் மைந்தரை கண்மணிகளாய் காத்திடும்
தங்களுக்கு எம் தந்தையரென பாசம்பாராட்டுவதன்றி என் செய்வது!