Thursday, July 15, 2010

இதுவும் கடந்து போகும்

நேற்றும்
இன்றும்
சந்தித்தன!

நேற்று -
நிரம்பி நிற்கின்றது
நிறங்கள் தோய்ந்த
நினைவுகளில்!

இன்று -
நிறம் தேய்ந்த
நினைவுகளுடன் புதிய
நிகழ்வுகளில்!

நாளை வந்து
அறிவுறுத்தியது
சுகம் துக்கம்
எதுவாயினும்
இதுவும்
கடந்து போகும்!
-- கி.வினோத்

விளையாட்டு

சிலருக்கு
துளி துளியாய்
மனம் புகும்
மெல்லிசையாய்
அமைகின்றது
வாழ்க்கை வரப்பிரசாதம்!

சிலருக்கு
அடி அடியாய்
மனம் அதிரும்
பறையொலியாய்
வாய்க்கின்றது
வாழ்க்கை பிடிசாபம்!

நேற்றை மிஞ்சிய
இன்றையக் கொடுமை
நாளையும் பன்மடங்காய்
விரியுமென
விளிம்புவரை வந்து
வெறுத்து அயர்ந்தது
மேலுமொரு அடிதாங்காத
மனது!

விதிக்கப்பட்ட களத்தில்
வழங்கப்பட்ட வீரர்கள்
வைத்து விளையாட்டு!
இடைவெளி பிளந்து
உயிர்ப்பந்து நகர்த்தி
நிம்மதி இலக்கடைய
நெடுநேரப் போராட்டம்!

அவர் அவருக்கென
வகுக்கப்பட்டதில்
சிறு சிறு சுகம்தேடி
விரைகிறது ஆட்டம்!
-- கி.வினோத்

Monday, July 05, 2010

பார்வை


தனிமை ஆணுக்கும் தகிக்கும்
என உணர்த்த நானும்,
கொடுஞ்செயல் பெண்ணுக்கும் பழக்கம்
என உணர்த்த அவளும்
பிரிகின்றோம்!
பொதுவாய் பெண்மைக்கு
பலம் சேர்ப்பதே
மண்ணின் பெருமையென இந்த
சாயம் பூசிய சமுதாயம்
காட்சி பொருளாக்கி
அழ வைத்தது என் ஆண்மையை!
பெண்மை முகமூடிக்கு பின்புறம்
குரூர களிப்புடன் சிரித்தாலும்
வெளிபுறம் அழுகின்றாள்
என்றும் போலவே!
அன்றும்
கைபிடித்தவனை காதலித்து
உடனிருக்கவில்லை அவள்!
இன்றும்
எதிராளியென நினைத்து
எதிர்க்கவில்லை நான்!
சாயம் கலைத்த சமூகம்
மெல்ல மெல்ல சரிந்து
என் மீது படர்கையில்
விடியும் இருவருக்கும்!
             --கி.வினோத்